தமிழக காங்கிரஸ் 'நிலைமை' குறித்து ராகுல் ஆலோசனை!
டெல்லி: மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்ட நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டிருப்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்
காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழ்நாடு, ஆந்திரம், புதுச்சேரி மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராகுல் காந்தியை நேற்று சந்தித்துப் பேசினர்.
தமிழகத்தின் சார்பில் ஞானதேசிகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கோபிநாத் ஆகியார் ராகுலை சந்தித்தனர். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இதில் தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது குறித்தும், கட்சியின் தற்போதைய நிலை, தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஞானதேசிகன் விவரித்துள்ளார். தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்தி சில ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் வரைவுப் பெயர் பட்டியலை ராகுலிடம் ஞானதேசிகன் வழங்கியிருக்கிறார். ஆனால் அப்பட்டியல் குறித்து ராகுல் காந்தி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதேபோல் புதுச்சேரி பிரதேச தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் ஆகியோரும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications