ஒடிசாவில் வேதாந்தா குழுமம் பாக்சைட் தாது வெட்டி எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை!
டெல்லி: ஒடிசா மாநிலத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேதாந்தா குழுமம் மலைப் பகுதிகளில் பாக்சைட் தாது வெட்டி எடுப்பது தொடர்பாக கிராம சபைகளே முடிவெடுக்க வேண்டும் என்றும் அதுவரை பாக்சைட் தாது வெட்டி எடுக்க தடை நீடிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தின் துணை நிறுவனமான வேதாந்தா குழுமம். நியாம்கிரி மலைப் பகுதியில் பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க மாநில சுரங்கத்துறை அனுமதி அளித்தது. இதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும் அனுமதி அளித்தது. ஆனால் ஆயிரமாயிரமாண்டுகாலமாக வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களின் கிராம சபைகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் வேதாந்தா குழுமத்துக்கான அனுமதியை திரும்பப் பெறும்படி வன இலாகாவின் ஆலோசனைக்குழு, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இதை ஏற்று, நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் வெட்டி எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அளித்த அனுமதியை மத்திய சுற்றுச் சுழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றது.
இதை எதிர்த்து ஒடிசா அரசின் சுரங்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. மலைவாழ் கிராம சபைகள் கூடி, வேதாந்தா குழுமம் அந்த மலைப்பகுதியில் பாக்சைட் தாது வெட்டி எடுக்க அனுமதி அளிக்கலாமா? வேண்டாமா? என்று 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். அந்த கிராம சபைகள் அளிக்கும் முடிவை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க தடை நீடிக்கும் என்று தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications