பணி வழங்கக் கோரி கஞ்சி தொட்டி திறந்த மக்கள் நலப் பணியாளர்கள் கைது
ராமநாதபுரம்: நீதிமன்ற உத்தரவுப் படி மீண்டும் பணி வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 34 மக்கள் நலப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களை பசியினை போக்கிடும் வகையில், கஞ்சி தொட்டி திறக்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் வழிவிடு முருகன்கோயில் அருகே நடந்தது.
அப்போது பேசியவர்கள், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் குடும்பங்கள் வறுமையில வாடுகின்றனர். அவர்களது குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழ்நிலையில உள்ளனர். அதனால் தமிழக அரசு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை வலியுறுத்தி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண் மக்கள் நலப் பணியாளர்கள் உட்பட 34 மக்கள் நலப் பணியாளர்களை பஜார் போலீசார் கைது செய்தனர்.