சீர்காழி அருகே 2 விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் வெட்டிக் கொலை!
சீர்காழி: சீர்காழி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இரண்டு நிர்வாகிகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மணி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.டி.ரவி. இவர் விடுதலை சிறுத்தை ஒன்றிய அமைப்பாளர். மேலவெளியை சேர்ந்த ராஜேந்திரன்,விடுதலை சிறுத்தை கட்சியின் ஓவிய அணி மாவட்ட செயலாளர். இவர்கள் 2 பேர் மீதும் கொலை வழக்கு உள்ளது.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் பூம்புகார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தனர். இன்று காலை அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தனர்.
முதலில் ரவி கையெழுத்து போட்டு விட்டு சென்றார். 2-வதாக கையெழுத்து போட்டு விட்டு ராஜேந்திரன் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்ற மர்ம கும்பல் போலீஸ் நிலைய வாசலிலேயே ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதைத்தொடர்ந்து மர்ம கும்பல் தப்பி சென்றுவிட்டது.
முதலில் கையெழுத்து போட்டு சென்ற ரவி தர்மகுளம் மந்தகரை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவரையும் வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டி சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பூம்புகார் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே உள்ள மேலையூரை சேர்ந்த தி.மு.க. செயற்குழு உறுப்பினர் முத்து ராஜேந்திரன் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். வணிக வளாகத்தில் இருந்த அவரை வெடிகுண்டு வீசி ஒரு கும்பல் கொன்றது. இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.