கூடங்குளம் போராட்டக் குழு "ஆதரவாளர்கள்" நாளை அணுமின் நிலைய முற்றுகை!
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்திவரும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரின் போராட்டம் தொடர்கிறது. அவர்கள் கடல் வழியாக சென்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினார்கள். இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிஆன போராட்டக் குழுவின் ஆதரவாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரண்டு அணுமின் நிலையத்தை முற்றுகையிட உள்ளனர். இந்த போராட்டத்தில் இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழுவினர் யாரும் பங்கேற்கமாட்டர்கள்.
வேறு மாவட்டங்களில் உள்ள அணுசக்திக்கு எதிரான கூட்டமைப்பினர், பல்வேறு அமைப்பினர் கன்னியாகுமரியில் இருந்து பேரணியாக கூடங்குளம் நோக்கி வந்து முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இதில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணுசக்திக்கு எதிரான கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்கிறார்கள். 80-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த சுமார் 2000பேர் இதில் பங்கேற்கிறார்கள். இந்த முற்றுகைப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொடங்கி வைக்கிறார். போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்குகிறார்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூத்தங்குளி மற்றும் இடிந்தகரையில் பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும் மீனவர்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இடிந்தகரையில் உதயகுமார் தலைமையிலும், கூத்தங்குளியில் மைபா ஜேசுராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.