பாஸ்டன் எம்ஐடியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்: ஒரு பாதுகாவலர் பலி

கடந்த திங்கள்கிழமை தான் பாஸ்டன் நகரில் நடந்த மாராதான் போட்டியை குறி வைத்து இரு குக்கர் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன. இதில் 3 பேர் பலியாயினர், ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த செயலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு, இன்னொருவனை போலீசார் தேடி வரும் நிலையில், இந்த நகரில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற தொழில்நுட்பப் மையமான மசாசூசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் இன்று காலை (அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை இரவு) துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது.
இந்த மையத்துக்குள் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து போலீசார் பதிலுக்குச் சுட்டனர். இந்த சண்டையில் ஒரு போலீஸ்காரர் பலியாகிவிட்டார். மேலும் இந்த கல்வி மையத்தின் சில பாதுகாப்பு வீரர்களும் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஒரு கட்டடத்தில் பதுங்கியிருந்தார். அந்தக் கட்டடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு நபர் பிடிபட்டுவிட்டதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொருவர் குறித்து தகவல் இல்லை.
பாஸ்டன் மாராதான் குண்டுவெடிப்பு நடந்த இடமும் எம்ஐடி பல்கலைக்கழகமும் 3 கி.மீ. தூரத்துக்குள் தான் உள்ளன. இதனால் குண்டு வைத்த 2 நபர்களும், எம்ஐடியில் தாக்குதல் நடத்திய 2 பேரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications