டெல்லியில் 13 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த 8 பேர்: 3 பேர் கைது

கிழக்கு டெல்லி பர்ஷ் பஜார் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் அவரது 12 வயது தம்பி ஆகியோர் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருக்கையில் அவர்களுக்கு தெரிந்த 2 பேரால் கடத்தப்பட்டனர். அந்த நபர்கள் அவர்களை நகருக்கு வெளியே இருக்கும் லோனி என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அந்த 2 பேரும், மேலும் அவர்களுடன் 6 பேரும் சேர்ந்து சிறுமியை கற்பழித்தனர்.
இதற்கிடையே பிள்ளைகளை காணவில்லை என்று அவர்களின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். சிறுமியும், அவரது தம்பியும் கடந்த மாதம் 24ம் தேதி வீடு திரும்பினர். அதன் பிறகு சிறுமியின் தந்தை பாலியல் பலாத்கார புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தான் பாலியல் பலாத்கார புகார் வாங்க மறுத்ததாக சிறுமியின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட செய்தியை டிவியில் பார்த்த சிறுமி நேற்று காலை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் கிழக்கு டெல்லியில் உள்ள ஹெட்கெவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் குடும்பத்தார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று தீபக்(21), ரஞ்சித்(20) மற்றும் சோஹன் லால்(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். சிறுமியை கற்பழித்தவர்களில் 4 பேர் அவருக்கு தெரிந்தவர்கள் தான் என்று போலீசார் தெரிவித்தனர் மீதமுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications