புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெற்றியை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் மனு
நெல்லை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி போட்டி வேட்பாளர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் அந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அவரை எதிர்த்து போட்டியுள்ள கொடியன் குளம் குமார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொடியன்குளம் குமார் கூறியதாவது: கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடநதது. நான் ஓட்டப்பிடாரம் தனி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செயதேன். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக கிருஷ்ணசாமி உள்பட 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். புதிய தமிழகம் கட்சி
நிறுவனர் கிருஷ்ணசாமி தனது வேட்பு மனுவில் இந்து தேவேந்திரகுலத்தான் என மோசடியாக மனு தாக்கல் செய்துள்ளார்.
மோசடியாக அவர் ஜாதி சான்றிதழ் வாங்கி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தேர்தலில் வெற்றியும் பெற்று விட்டார். எனவே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும். இதற்காக சென்னை தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ளேன். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இதுகுறித்து நான் மனு தாக்கல் செய்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.