இன்று 2013ன் முதல் மற்றும் குறுகிய நேர சந்திர கிரகணம்: கோவில்களில் நடை அடைப்பு
சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்திய நேரப்படி இன்று இரவு 1.22 மணிக்கு துவங்கி, 1.57 மணிக்கு முடிவடைகிறது. சரியாக 27 நிமிடங்கள் நீடிக்கும் இந்த கிரகணம், உலகின் பெரும்பாலான நாடுகளில் தெரியும். இந்தியா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கிரகணத்தைக் காண முடியும்.
சந்திரகிரகணத்தை ஒட்டி இன்று மாலையுடன் திருப்பதி, ராமேஸ்வரம் கோவில் நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்த பின்னர் கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் முடிந்த உடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ரமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், சந்திர கிரகணத்தை யொட்டி, இன்று மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். நள்ளிரவு 1.20 க்கு, கோயிலில் இருந்து, கிரகணத்திற்குரிய சுவாமி புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். மகா தீபாரதனை முடிந்த பின், தீர்த்தம் வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் கோயிலுக்குள் வலம் வந்து, இரவு 1.55க்கு, சந்திரகிரகணம் முடிந்த பிறகு, சுவாமிக்கு கிரகண அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்பின், அர்த்தஜாம பூஜைகள், நடைபெறும். வெள்ளிக்கிழமை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.
திருப்பதி கோவிலில் 10 மணிநேரம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வியாழன் மாலை 5 மணி முதல் மறுநாள் 26ம் தேதி அதிகாலை 3 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது.
இதனால் 10 மணி நேரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பின்னர் 3 மணிக்கு மேல் கோவில் முழுவதும் தண்ணீரால் தூய்மைப்படுத்தப்படும். அதன்பிறகு சுப்ரபாத சேவை நிகழ்ச்சி, ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனம் ஆகியவை நடக்கின்றன. அதன் பின்புதான், இலவச தரிசனம், திவ்ய தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதனை கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காளகஸ்தியில் தரிசனம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சூரிய கிரகணம் மற்றும் சந்திரகிரகணம் நிகழும்போது கோவில் நடையை அடைப்பதில்லை. ஏனெனில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்ரவர் ராகுவாகவும், ஞானபிரசுனாம்பிகை கேதுவாகவும், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு 27 நட்சத்திரங்கள் தன்னுடன் ஐக்கியப்படுத்தி இருப்பதாலும், மேலும் மூலவர் சர்ப்ப ரூபத்தில் இருப்பதால் கிரகண தோஷங்கள் ஏற்படாது என்பது ஐதீகம். இதனால் கிரகணங்களின்போது மற்ற கோவில்கள் நடைகள் சாற்றப்பட்டு இருந்தாதலும், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் திறந்து இருக்கும்.
வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் நடைபெறும். கிரகணத்தின்போது சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறும். கிரகணம் முடிந்த பிறகு கோவில் சுத்தப்படுத்தப்படும்.