போலி ஏ.டி.எம் கார்டு கொடுத்து மக்களை ஏமாற்றிய பீகார் என்ஜினீயரிங் மாணவர் கைது
சேலம்: சேலம் ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக பீகாரைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடும் பணியை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சேலத்தில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் தவிக்கும் நபர்களுக்கு உதவுவது போல் நடித்து அவர்களிடம் போலி கார்டை கொடுத்து விட்டு ஒரிஜினல் கார்டு மூலம் பணம் எடுக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் முள்ளுவாடி அருகே ஏ.டி.எம்.மையம் அருகில் வந்த 4 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். ஆனால், அவர்களில் 3 பேர் போலீசாரிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் ஒருவரை மடக்கி பிடித்து விசாரிக்கையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரமோத்குமார் (வயது 26) என்பதும், ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுத்து தருவது போல் பொதுமக்கள் பலரை ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது.
கைதான பிரமோத்குமார் உள்பட 4 பேரும் சேலம் நரசோதிப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டை போலீசார் நோட்டமிட்டனர். அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக்குமார் என்ற பீபுள் (வயது 23) என்ற மற்றொரு ஏடிஎம் திருடனும் பிடிபட்டான்.
விசாரணையில், கைதான அபிஷேக்குமார் சேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.டி. படித்தவர் என்பதும், ஏ.டி.எம். மையங்களில் கடந்த 4 ஆண்டுகளாக கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும், இதன்மூலம் பல லட்சக்கணக்கான ரூபாயை அக்கும்பல் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அபிஷேக்குமார், சேலத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 85 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். ஆனால், கல்விக்கட்டணம் ரூ.2 லட்சத்திற்கு மேல் நிலுவை வைத்திருந்ததால், கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications