சிறுவர்கள் பிரச்சனையில் வேன் டிரைவர் வெட்டிக் கொலை
நெல்லை: நெல்லை அருகே முன் விரோதம் காரணமாக வேன் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ஆனந்தகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பட்டன் மகன் செந்தில். வேன் டிரைவர். அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். வேலை இல்லாத நாட்களில் செந்தில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை பராமரித்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அப்பகுதி அம்மன் கோவில் திடலில் செந்திலின் சித்தப்பா மகன் காவேரி உள்ளிட்ட சிலர் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் உறவினர் மகன் மீது பம்பரம் பட்டு லேசாக காயம் ஏற்பட்டது. இது குறித்து சுந்தர் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.
காவேரி பள்ளி மாணவர் என்பதால் போலீசார் அவரை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பினர். இதன் காரணமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு செநதில் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது முட்புதரில் மறைந்திருந்த சுந்தர், அவரது உறவினர் பாண்டி ஆகியோர் செந்திலை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சுந்தரும், பாண்டியும் பைக்கில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்த தழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுந்தரின் இரண்டு நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பிய இரண்டு பேர்களையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications