சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கு: காங். தலைவர் சஞ்சன்குமார் விடுதலை-நீதிபதி மீது செருப்பு வீச்சு
1984ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் பெரும் வன்முறை நடந்தது. காங்கிரஸார் சீக்கியர்களை குறி வைத்துத் தாக்கினர். இதில் ஏராளமான சீக்கியர்கள் உயிர்ழந்தனர். அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
இது தொடர்பாக விசாரணை நடத்திய நானாவதி கமிஷன் பரிந்துரை செய்ததையடுத்து 2005ம் ஆண்டு சிபிஐ விசாரணை ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் டெல்லி எம்பியான சஜ்ஜன் குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. டெல்லி கன்டோன்மெண்ட் ஏரியாவில் சுல்தான்புரி பகுதியில் ராஜ் நகரில் குண்டர்களை ஏவி விட்டு சீக்கியர்களைத் தாக்கியதாக சஜ்ஜன் குமார் மீது வழக்குப் பதிவானது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சீக்கியர்கள் கொலையாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் இன்று டெல்லி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சஜ்ஜன் குமாரை விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் குவிந்திருந்த சீக்கியர்கள் இடையே பெரும் ஆவேசம் பரவியது. அதில் ஒருவர் நீதிபதி மீது செருப்பை வீசினார்.
மேலும் நீதிமன்றத்துக்கு வெளியிலும் சீக்கியர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.