நாளை கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியைப் பிடிப்பது யார்?

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. மொத்தம் 224 தொகுதிகளில் 223 தொகுதியில் மட்டும் தேர்தல் நடந்தது. பெரியபட்னா தொகுதியில் பாஜக வேட்பாளர் இறந்ததையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. அங்கு தேர்தல் வரும் 28ம் தேதி நடக்கிறது.
நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 4.36 கோடி வாக்காளர்களில் 70.23 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அந்தந்தத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு முன்னதாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிவிடும்.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
அதே நேரத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையை தேர்தலுக்கு முன்பே இழந்துவிட்டது. அந்த அளவுக்கு பாஜக அரசு ஊழல் புகார்கள், நில ஆக்கிரமிப்பு புகார்கள் குவிந்தன.
இந்தத் தேர்தலில் தனிக் கட்சி தொடங்கிய மாஜி முதல்வர் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் கடைசி இடத்தையே பிடிக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் இவரது கட்சியால் தான் பாஜக ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 3வது இடத்தையே பிடிக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே முதல்வர் பதவியைப் பிடிக்கும் போட்டி இப்போதே ஆரம்பித்துவிட்டது. தங்களது ஆதரவு திரட்டும் வேலைகளில் மாநில காங்கிரஸ், தலைவர் பரமேஸ்வர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல அமைச்சரையில் இடம் பிடிக்கும் முயற்சிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும் தீவிரமாக உள்ளனர்.
முதல்ல ரிசல்ட் வரட்டும்யா!












Click it and Unblock the Notifications