தமிழகத்தில் வன்முறை, பல கோடி ரூபாய் சேதத்திற்கு ராமதாஸே பொறுப்பு: ஹைகோர்ட்டில் வழக்கு

வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
மாமல்லபுரத்தில் கடந்த 25ம் தேதி சித்திரை திருவிழா என்ற பெயரில் பாமக சார்பில் கூட்டம் நடத்தினார்கள். அப்போது, கலவரம் வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் பெரும் சேதம் அடைந்தன. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட கலவரம் காரணமாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பாமகவினரால் சேதப்படுத்தப்பட்டன. மேலும் சில பேருந்துகள் எரிக்கப்பட்டன. இதனால் கோடிக் கணக்கான ரூபாய் அரசுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பாமகவின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தான் பொறுப்பு.
எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இந்த பிரச்சினையில் தற்போதுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து அனைத்து சேதாரம் குறித்து மதிப்பை கணக்கிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications