பெல்காம் மராத்தியருக்கு துரோகம் செய்த பாஜக தோற்றதில் மகிழ்ச்சி: சிவசேனாவின் உத்தவ்தாக்கரே அதிரடி!

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனாவும் நீண்டகாலமாக இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அண்மைக் காலாமாக ஜனாதிபதி தேர்தல் விவகாரம், மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது உள்ளிட்டவற்றில் சிவசேனா- பாஜக இடையேயே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்த சூழலில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனாவின் தலைவர் உத்தவ்தாக்கரே, கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் மராத்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க சிவசேனா தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால் கர்நாடகாவில் ஆண்ட பாரதிய ஜனதா கட்சி இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் அந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவியது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. கர்நாடக பாஜக ஆட்சியர்கள் மராத்தியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். அதனால் தான் அக்கட்சியின் தோல்வி எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
ஆனால் பாரதிய ஜனதாவோ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் மகாதேவ் பண்டாரி கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஒரு கட்சி இப்படி விமர்சிப்பது சரியல்ல..பெல்காம் எல்லை விவகாரம் என்பது முந்தைய காங்கிரஸ் அரசு செய்திருக்க வேண்டியது.. அதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications