டீசல் விலையை மாதாமாதம் உயர்த்துவது ஏழைகள் வயிற்றில் அடிக்கும் செயல்! - ஜெயலலிதா
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விஷம் போல் ஏறும் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கும் ஊழலைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்காமல், டீசல் மீதான மானியத்தை நீக்கி அரசின் வருவாயை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விலைவாசி உயர்விற்கு வழி வகுக்கும் டீசல் விலையை மாதா மாதம் மத்திய அரசு உயர்த்துவது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
மாதா மாதம் டீசல் விலை ஏற்றப்படும் என்ற கொள்கை காரணமாக, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் டீசல் விலையை ஏற்றியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு காரணமாக, சரக்கு வாகனங்களின் கட்டணங்கள், பள்ளி வாகனங்களின் கட்டணங்கள், வாடகை வாகனங்களின் கட்டணங்கள், ரயில் கட்டணங்கள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலைகள் மேலும் உயரக்கூடும். இதன் விளைவாக, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதன்மூலம் பணவீக்கம் மேலும் உயர்ந்து, நாட்டின் பொருளாதாரமும் சீரழியும்.பொதுமக்களின் நலன் கருதி, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் இந்த டீசல் விலை உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதை திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.