புதுவை மத்திய சிறை வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 10 செல்போன்கள் பறிமுதல்
புதுச்சேரி: புதுவை காலாப்பட்டு சிறை வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 செல்போன்களை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுவை மாநிலம் காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் உள்ள சில கைதிகள் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இது குறித்த புகார்கள் உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சிறைத்துறை போலீசார் அவ்வப்போது சிறையில் திடீர் சோதனை நடத்தி, கைதிகளிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சோதனைக்கு பின்பும் கைதிகளிடம் செல்போன்கள் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு மீண்டும் புகார் சென்றது.
இதனையடுத்து மத்திய சிறையில் தீவிர சோதனை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன் பேரில் சிறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சிறை வளாகத்தில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த 10 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications