நகைக்கடையில் பண மோசடி: போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
சென்னை: சென்னை நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து பணம் கேட்ட மோசடி நபர்களை போலீசார் கைது செய்தனர்.
வருமானவரித் துறை அலுவலகத்தில் நடக்கும் விழா ஒன்றுக்கு பணம் வேண்டும் என்று மாம்பலத்தில் உள்ள ஒரு நகைக் கடைக்கு, கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் பேசியுள்ளனர். ஏற்கனவே இதே நகைக் கடைக்கு போன் செய்து பணம் கேட்டு, அதன்படி, நகைக் கடைக்காரரும் ரூ.60,000 கொடுத்துள்ளார். இது பற்றி பின்னர் வருமான வரித்துறையில் விசாரித்த போது அப்படி ஒருவர் இல்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து அதேநபர்கள் மீண்டும் தொலைபேசியில் பேசவே, அவர்களை சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, நகைக் கடைக்காரர் போலீசில் புகார் அளித்தார்.
ஆனால் சுதாரித்த குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். எனினும், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு சேஷாத்திரி (53), ஜார்ஜ் பாசித் (43) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பணமோசடிக்கு தலைமையாக செயல்பட்டவன் தலைமறைவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க மூளையாக செயல்பட்டவனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதேபோல் வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து 45 லட்சம் மோசடி செய்த 5பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 33 லட்சத்தை போலீசார் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications