தடையை மீறி கருத்தரங்கம் நடத்தியதாக சீமான் மீது வழக்கு... கைது செய்ய போலீஸ் தீவிரம்!

கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பொதுக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை மீறி தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் போட்டு டிஜிட்டல் பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் வைத்ததால் பொதுக் கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.
இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது. ஆனால் இந்த கருத்தரங்கத்தை தொடர்ந்து இரவு பொதுக் கூட்டமும் இதே மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து இரவு 10.20 மணி வரை நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
இந்நிலையில் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், தடையை மீறி சீமான், நாம் தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கடல்தீபன், ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர் ஆகியோர் கடலூர் டி.வி.எம். மகாலில் நாம் தமிழர் கட்சியினரை ஒன்று கூட்டி கலைநிகழ்ச்சி, நாடகம், கருத்தரங்கம் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி மூலம் அதிக சத்தம் ஏற்படுத்தியும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வாகனத்தை நிறுத்தியும், 30/2 போலீஸ் சட்டம் நிலுவையில் உள்ள போது இரவு 10 மணிக்கு மேல் 10.20 மணி வரை தொடர்ந்து பொது ஜன அமைதிக்கு குந்தகம், பங்கம் விளைவித்தார்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பேரில் சீமான், கடல்தீபன், சவுண்ட் சர்வீஸ் ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர் ஆகிய 3 பேர் மீது திருப்பாதிரி புலியூர் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சீமான் உள்பட 3 பேரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications