மழை இல்லை... காட்டுத் தீ பரவும் அபாயம்: களக்காடு புலிகள் காப்பகம் இன்று முதல் மூடல்
களக்காடு: கடும் வறட்சி காரணமாக காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால், களக்காடு புலிகள் காப்பகம் இன்று முதல் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் கூறியதாவது, ‘களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. தலையணையில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து, தற்போது முற்றிலும் வறண்டு விட்டது. தடுப்பணை அருவியிலும் தண்ணீர் விழவில்லை.
தடுப்பணை அருகே பள்ளத்தில் சிறிதளவு தண்ணீர் தேங்கி நின்றாலும், அது குளியல் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை. மழை இல்லாததால் பசுமையுடன் காட்சி அளித்த வனப்பகுதி காய்ந்து காணப்படுகிறது. இதனால் எளிதில் காட்டுத் தீ பரவும் அபாயம் நிலவி வருகிறது.
இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பகத்தை இன்று (20ம் தேதி) முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. தலையணைக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து, வறட்சி நீங்கியதும், புலிகள் காப்பகம் திறக்கப்பட்டு, மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்' என கூறினார்.












Click it and Unblock the Notifications