இந்தியாவிடம் 1000 மெகாவாட் மின்சாரம் கேட்கும் திட்டத்தில் பாகிஸ்தான்

கடும் கோடைக் காலம் நிலவிவரும் சூழலில், பாகிஸ்தானில் கடுமையான மின்சார தட்டுப்பாடும் கை கோர்த்துக் கொண்டு மக்களை வாட்டுகிறது. பல பகுதிகளில் மக்கள் 4 மணி நேரம் கூட மின்சாரம் கிடைக்கப்பெறாமல் அல்லல் பட்டு வருகின்றனர்.
இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி போன்ற முக்கிய பெருநகரங்களில் கூட தொடர்ச்சியான அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அரசு புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்த வண்ணமே உள்ளது. முதலில், அரசு அலுவலகங்களில் குளிர் சாதன இயந்திரங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பின் உடைக் கட்டுப்பாடு, வீடுகளில் தண்ணீர் மோட்டார் பயன் படுத்த தடை என பட்டியல் நீள்கிறது. நிறுவனங்களுக்கும், மின்சாரத்தை உபயோகிக்க கடும் நிபந்தனைகளும் கட்டுப்பாடும் கூட விதிக்கப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீப் தலைமையில் விரைவில் புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில், இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அண்டை நாடுகளான இந்தியா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் மின்சாரம் கொள்முதல் செய்வதுதான் மின் பற்றாக்குறைக்கான உடனடி தீர்வாக அமையும் என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'இந்தியாவில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்யப்படுவது உண்மைதான் ' என்று உலக வங்கியின் இஸ்லாமாபாத் அதிகாரி ஒருவரும் கூறியுள்ளார்.
விலை நிர்ணயம் மற்றும் மின்சாரம் கொண்டு வருவதற்கான வழித்தடங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பின்னர் இந்தியாவில் இருந்து 2 ஆண்டு காலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications