பெங்களூரில் 2 மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை: தெருவெல்லாம் வெள்ளக்காடு
பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு சுமார் 2 மணிநேரம் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் தெருவெல்லாம் வெள்ளக்காடானது.
பெங்களூரில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 2 மணிநேரம் வெளுத்துக் கட்டிய மழையால் தெருவெல்லாம் வெள்ள்க்காடானது. கோடை காலத்தில் நேற்று தான் அதிபட்சமாக 36 மிமீ மழை பெய்துள்ளது. கன மழை மற்றும் காற்றால் நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பசவேஸ்வராநகர், தசரஹல்லி, கமலாநகர், மல்லேஸ்வரம், ஜெயாநகர், திலக் நகர், பிடிஎம் லே அவுட், கோரமங்கலா, ஜேபி நகர், ஸ்ரீநகரில் மரங்கள் சாய்ந்தன. இது தவிர பல்வேறு இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இரவு 10 மணிக்கு துவங்கி நள்ளிரவு 12 மணிவரை இடி மின்னலுடன் சக்கை போடு போட்ட மழையால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகின. பெங்களூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு மழை சேதம் குறித்து புகார்கள் வந்து குவிந்துவிட்டன. மழையால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி எடுப்பதும், இரவு நேரத்தில் மழை பெய்வதுமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications