மாரடைப்பால் துடிப்பு... ரயிலை நிறுத்தி ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிர் காத்த டிரைவர்
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய மின்சார ரயில் கும்மிடிப்பூண்டிக்கு வந்தபோது திடீரென நின்றது. குழப்பமடைந்த பயணிகள் என்ன ஏது என்று பார்த்தபோது ரயிலை நிறுத்தி விட்டு என்ஜின் டிரைவர் மாரடைப்பால் துடித்த விவரம் தெரிய வந்து அனைவரும் அதிர்ந்து போயினர்.
தனக்கு ஏற்பட்ட மாரடைப்பால் ரயிலை உடனடியாக நிறுத்தி விட்டு அத்தனை பயணிகளின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளார் என்ஜின் டிரைவரான மனோகரன்.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 9 மணிக்கு வந்து சேரவேண்டிய கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் வழியிலேயே நின்றுவிட்டது. இதனால், என்ன நடந்தது குழப்பத்தில் ரயில் பயணிகள் ரயிலிலேயே காத்திருந்தனர்.
அரை மணி நேரம் காத்திருந்தும் ரயில் புறப்படவில்லை. இதனால், பயணிகள் இறங்கி வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடமான கவரப்பேட்டை நிலைய அதிகாரியிடம் தகராறு செய்தனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போதுதான் நடந்த விவரம் தெரிய வந்தது.
திருவள்ளூர் மாவட்டம் நக்கீரன் தெருவைச்சேர்ந்தவர் சம்பந்தம் பிள்ளை. இவரது மகன் மனோகரன். தென்னக ரயில்வேயில் ரயில் ஓட்டுநராக பனியாற்றி வந்தார். இவர்தான் நேற்று கும்மிடிப்பூண்டியில் இருந்து செண்ட்ரல் நோக்கி வந்து ரயிலை இயக்கியவர். கும்மிடிப்பூண்டியிலிருந்து ரயில் புறப்பட்டதும் மனோகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் ரயிலை இயக்கும்போது நிலை தடுமாறியிருக்கிறார்.
உடனடியாக பிரேக் அடித்தாலோ அல்லது வலியின் காரண்மாக தடுமாறி கீழே சாய்ந்தாலோ ரயிலில் இருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் போயிருக்கும். இதனால் அவர் தனது வலியை தாங்கிக்கொண்டு கவரப்பேட்டையில் ரயிலை நிறுத்திவிட்டார்.
வலியால் துடித்த மனோகரனை ரயில்வே அதிகாரிகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலன் இல்லாமல் மனோகரன் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications