திருச்சி... பலாத்காரத்துக்குள்ளான சிறுமிக்கு சிகிச்சை மறுப்பு- மாதர் சங்கம் மறியல்!
திருச்சி: பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்காததை கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு மருத்துவமனையையும் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி பாலக்கரையை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 25ந் தேதி உலகநாதன் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூடினர். அதற்குள் உலகநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான காமுகனை தேடிவந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த உலகநாதனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 26ந் தேதி அனுமதிக்கப்பட்டாள். ஆனால், 2 நாட்களாக மருத்துவ பரிசோதனை எதுவும் நடத்தாமல் சிறுமியை தரையில் படுக்க வைத்திருந்தனர். இதையறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநகர செயலாளர் ஆயிஷா, மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் பெண்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன் கூடினர். பின்னர் அவர்கள் மருத்துவமனை எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டு மருத்துவமனைக்குள் முற்றுகையிட நுழைந்தனர். மருத்துவமனை உள்ளே சென்ற அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உலகநாதன் மீது 2013ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications