விழுப்புரம் வழியாக திருமாவளவன் சிதம்பரம் செல்ல இன்று மட்டும் அனுமதி
சென்னை: விழுப்புரம் வழியாக சிதம்பரத்திற்குச் செல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்தது.
மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து விழுப்புரம் மாவடட்த்திற்குள் திருமாவளவன் உள்ளிட்டோர் நுழைய போலீஸ் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரி திருமாவளவன், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் சார்பில் வாதாடிய வக்கீல் சங்கரசுப்பு கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருமாவளவன், சிதம்பரத்தில் இன்று நடக்கும் நாடாளுமன்ற எம்.பி.,க்கள் குழு கூட்டத்தில் கூட அவரால் பங்கேற்க முடியவில்லை. எனவே விழுப்புரத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இன்று ஒரு நாள் மட்டும் சிதம்பரம் தொகுதிக்கு சென்று வர திருமாவளவனுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் வழியாக செல்கிற போது கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள கூடாது என்ற நிபந்தனை விதித்து 144 உத்தரவுக்கு தடை கோரும் வழக்கையும் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications