Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே மாதத்தில் 51 கொலைகள்.. இதையும் அதிமுக ஆட்சி சாதனை பட்டியலில் சேர்க்க கருணாநிதி 'சிபாரிசு'!

Subscribe to Oneindia Tamil

Fifty one murders in May alone in Tamil Nadu: Karunanidhi
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரே மாதத்தில் 51 கொலைகள் நடந்துள்ளதையும் அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனை பட்டியலில் சேர்க்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் இந்த ஆண்டு ஜனவரி 31ல் திமுக செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷில் ஆரம்பித்த கொலை, மாதம்தோறும் சராசரியாக 3 கொலைகள் வரை அரங்கேறி வருகின்றன. ஏப்ரல் 3ம் தேதி தனிச்சியம் ஸ்டேட் வங்கி ஏடிஎம் மைய காவலாளி செல்வம், ஏப்ரல் 21ல் மாடக்குளம் கூலித் தொழிலாளி முருகேசன், மே 18ல் முடக்காத்தான் குணவதி ஆகியோர் கொல்லப்பட்டனர். இவ்வழக்குகளில் இதுவரை 'க்ளூ' கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு ஜனவரியில் 3 பேரும், பிப்ரவரியில் 4 பேரும், மார்ச்சில் 5 பேரும், ஏப்ரலில் 4 பேரும், மே மாதத்தில் நேற்று முன்தினம் வரை 6 பேரும் கொலை செய்யப்பட்டனர். இதில் மே 26 முதல் நேற்று மாலை வரை அடுத்தடுத்து, 4 பேர் கொல்லப்பட்டனர். எப்படி அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அமைதி?.

அட்டாக் பாண்டியை காவல்துறை தேடிக் கொண்டே இருக்கிறது:

மதுரையில் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆகின்றன. முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் அட்டாக் பாண்டியை சர்வ வல்லமை படைத்த தமிழக காவல்துறை தேடுகிறது தேடுகிறது, தேடிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அட்டாக் பாண்டியிடம் ஓர் இதழ் பேட்டி பெற்று வெளியிட்டுள்ளது. எப்படி நமது ஜெயா ஆட்சி?.

சசிகலா அண்ணன் மகன், சசிகலா கணவர்...:

இதற்கிடையே சசிகலா அண்ணன் மகன் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு சசிகலா கணவரே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், நில அபகரிப்பு செய்ததாகச் சொல்லி என்னைக் கைது செய்து 82 நாட்கள் சிறையில் அடைத்தார்கள். மொத்தம் 6 வழக்குகள் போட்டார்கள். இத்தனை மாதங்கள் ஆகியும் இவற்றில் எந்த வழக்குக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையே ஏன் என கேட்டிருந்தார். அதற்கு இந்த ஆட்சியினரோ, முதல்வரோ பதிலளிக்கவில்லை.

என்னை மாதிரி ஒரு இளிச்சவாயன்தான்.. நடராஜன்:

சசிகலா கணவர் நடராசன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு கொடுத்த பேட்டியில், என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள். சசிகலா மீண்டும் சேர்வதற்கு முன்னாடி அவர் பெயரில் வந்த அறிக்கை, அவர் கொடுத்த அறிக்கை அல்ல. என் மனைவிக்கு அறிக்கை தயாரிக்கத் தெரியாது. 3 முறை முதல்வராக இருப்பவராலேயே ஒரு அறிக்கை தயாரிக்க முடியாது. என்னை மாதிரி ஒரு இளிச்சவாயன்தான் ரெடி பண்ணித் தரணும். திருச்சி ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன் தஞ்சாவூரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்துக்கிட்டு எல்லா இன்ஸ்பெக்டர்களையும் கூப்பிட்டு என் மேலே ஏதாவது ஒரு கேஸ் போட்டுட்டு வாங்கன்னு உத்தரவு போடுறாராம் என நடராசன் பேட்டி கொடுத்து ஏடுகளில் வெளிவந்ததே?.

ஜெயலலிதாவோடு கோவிலுக்கு சென்றவர் சாட்சாத் சசிகலாதான்...:

அதிமுக அரசு இதற்கு என்ன பதில் சொல்லியது? எதுவுமே சொல்லவில்லையே?. ஆனால் இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு திருவரங்கம் கோவிலுக்கு உடன் சென்றிருப்பவர் யார் என்றால் சாட்சாத் சசிகலாதான்.

இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? நினைத்தால் கைது, நினைத்தால் விடுதலை என்றால் ஏதாவது சட்ட விதி முறைப்படி நடவடிக்கைகள் நடக்கிறதா?.

மே மாதத்தில் மட்டும் நடந்த கொலைகள் எத்தனை தெரியுமா?...:

மே மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைகள், அதுவும் ஏடுகளில் வெளிவந்த கொலைகள் மாத்திரம் எத்தனை தெரியுமா?.

குடியாத்தத்தில் நகைக்கடை ஊழியர் கொலை- ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை. பனப்பாக்கத்தில் தந்தையை அடித்துக் கொன்ற மகன். கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் சுபாஷ் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை. கொடுங்கையூரில் ஆட்டோ டிரைவர் சரவணன் வெட்டிக் கொலை. சென்னை புதுப்பேட்டையில் வேன் டிரைவர் ரமேஷ் கொலை.

தலை துண்டித்து வாலிபர் கொலை:

சோழவரம் அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை. திருப்பெரும்புதூர் அருகே புரட்சி பாரதம் கட்சிப் பிரமுகர் ராமு கழுத்தை அறுத்துக் கொலை. தாராபுரத்தில் காதல் மனைவியைக் கொன்ற வாலிபர் ரமேஷ்.

ஜெயங்கொண்டம் அருகே மகளின் கள்ளக்காதலன் பழனிச்சாமி கொலை. திருப்பூரில் மின்சாரம் பாய்ச்சி மனைவி செல்வி கொலை. செங்குன்றம் அருகே வாலிபர் எரித்துக் கொலை. கூடுவாஞ்சேரி அருகே கட்டிடத் தொழிலாளி சம்பத் அடித்துக் கொலை.

மாணவர் மதன் வகுப்பறையில் கொலை:

பூந்தமல்லி அருகே கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை. கோடம்பாக்கத்தில் லட்சுமி என்ற பெண் கொலை. சென்னை ஆதம்பாக்கத்தில் டிராவல்ஸ் நடத்திய பெண் உஷாராணி கொலை. புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி சுரேஷ் வெட்டிக் கொலை. மாதவரம் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வியாபாரி கோபால் அடித்துக் கொலை. கடையநல்லூர் அருகே மாணவர் மதன் வகுப்பறையில் கொலை.

அ.திமு.க. பிரமுகர் மூர்த்தி அடித்துக் கொலை:

சென்னை அருகே தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவர் பாலு குண்டு வீசிக்கொலை. வானூர் அருகே அ.திமு.க. பிரமுகர் மூர்த்தி அடித்துக் கொலை. பூந்தமல்லி அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர். சங்கராபுரம் மாஜி சேர்மன் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை. சங்கராபுரத்தில் தி.மு.க. செயலாளர் முனுசாமி வெட்டிக் கொலை.

துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை:

தண்டையார்பேட்டையில் துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை. குரோம்பேட்டை அருகே வீட்டுக்குள் கட்டிப் போட்டு முன்னாள் கவுன்சிலர் குப்புசாமி படுகொலை. வளசரவாக்கத்தில் சொத்துத் தகராறில் தந்தை பரமசிவம் கொலை.

இரண்டு வயது குழந்தை கடத்திக் கொலை:

ராஜபாளையத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்காக தொழில் அதிபர் மகன் பிரேம் குமார் கொன்று புதைப்பு. அரியலூரில் இரண்டு வயது குழந்தை கடத்திக் கொலை. புரசைவாக்கத்தில் மதுக்கடை பார் முன்பு வாலிபர் படுகொலை. கொருக்குப்பேட்டையில் புது மாப்பிள்ளை கமல்ராஜ் வெட்டிப் படுகொலை. நாகர்கோவிலில் திருமணம் செய்த பெண் மாமனாருடன் வெட்டிக் கொலை.
சோழவரம் அருகே மது குடிக்கும் தகராறில் பெயிண்டர் விமல்பிரபு படுகொலை. செங்குன்றம் அருகே பரோலில் வந்த கைதி முத்துபிரகாஷ் வெட்டிக் கொலை. பல்லடம் அருகே ராணி என்பவர் சரமாரி வெட்டிக் கொலை. செம்மஞ்சேரியில் வாலிபர் சுரேஷ் கொலை.

அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை:

சோழிங்கநல்லூர் அருகே பூட்டிய வீட்டில் பெயிண்டர் சுரேஷ் பிணம். சங்கராபுரம் அருகே விடுதலைச் சிறுத்தைப் பிரமுகர் விசுவநாதன் வெட்டிக் கொலை. மறைமலைநகர் அருகே நள்ளிரவில் வாலிபர் முருகன் வெட்டிக் கொலை. அருப்புக்கோட்டையில் சொக்கலிங்கம் குத்திக் கொலை. சேரன்மகாதேவியில் தொழிலாளி இசக்கி முத்து பாண்டியன் படுகொலை. சேலையூர் அருகே ஆட்டோ டிரைவர் ராஜேஷ் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை.
ராணிப்பேட்டை அருகே சிலோன் மோகன் படுகொலை. சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் ரங்கநாதன் துண்டு துண்டாக வெட்டிக் கொலை. சென்னையில் மாநகராட்சி ஊழியர் வீரா கொலை. சென்னையில் டெய்லர் முனியாண்டி படுகொலை. செங்கோட்டை அருகே அ.தி.மு.க. நிர்வாகி முத்தையா வெட்டிக் கொலை.

51 கொலைகள்

வேலூர் காவல் நிலையம் அருகே இளம்பெண் வெட்டிக் கொலை. சென்னையில் பழ வியாபாரி மாரி வெட்டிக் கொலை. சூளையில் வியாபாரம் செய்தபோது வேலு வெட்டிக் கொலை. வியாசர்பாடியில் பெண் தகராறில் வாலிபர் ராஜா படுகொலை. வானூர் கோயில் திருவிழாத் தகராறில் தே.மு.தி.க. பிரமுகர் பாஸ்கர் வெட்டிக் கொலை.

இவ்வாறு ஒரே மாதத்தில் 51 கொலைகள் நடந்துள்ளன என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+