ரயில் பெட்டி தயாரிக்கும் திட்டத்தை தனியாருக்கு கொடுக்கக் கூடாது: தா.பாண்டியன் எதிர்ப்பு
சென்னை: ரயில் பெட்டி தயாரிக்கும் திட்டத்தை தனியாருக்கு கொடுப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 1952ம் வருடம் தொடங்கப்பட்ட பெரம்பூர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) 11,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு ரூ. 240 கோடியில் 2-வது யூனிட் தொடங்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்காமல் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் 400 ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான ஆர்டர், மேற்கு வங்கத்தில் உள்ள 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஐ.சி.எப். தொழிலாளர்கள் உழைத்து உருவாக்கிய சுமார் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள வரைபடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மட்டுமின்றி சக்கரங்கள், இரும்பு, மின் சாதனங்கள் ஆகியவையும் தரப்படுகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் ஒவ்வொரு பெட்டிக்கும் பெரம்பூரில் உற்பத்தியாகும் அடக்க விலையை விட ரூ. 50 லட்சம் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 பெட்டிகளுக்கும் ரூ. 120 கோடி அதிகமாக தர வேண்டியிருக்கும்.
அரசின் இந்த முடிவால் பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையை மூடும் நிலை ஏற்படும். எனவே, தனியாரிடம் 400 பெட்டிகள் தயாரிப்பை ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். பெரம்பூர் ஐ.சி.எப்பில் திட்டமிட்டபடி 2-வது யூனிட்டை உடனே தொடங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications