குற்றாலத்துக்கு கிளம்புங்க பாஸூ!!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் இந்த ஆண்டு குற்றால சீசன் ஜூன் 1ம் தேதியே தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அருவி நகரமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்திற்கு வந்து குளித்து மகிழ்வார்கள்.
சாரல் மழையில் நனைந்து கொண்டே அருவிகளில் குளிப்பது இதனமானது. இந்த ஆண்டு சீசன் குறிப்பிட்ட காலத்திலேயே தொடங்கியுள்ளதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அருவி நகரம்
குற்றால நகரம் அருவிகள் நகரமாகும். பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், செண்பகாதேவி அருவி, புலியருவி, தேனருவி என பல அருவிகள் குற்றாலத்தில் குளித்து மகிழ உள்ளது.

சந்தோச சாரல் மழை
மிதமான வெயில் அதோடு இதமான சாரல் என ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை குற்றாலத்தில் சீசன் களை கட்டும். இந்த ஆண்டுக்கான சீசன் சரியாக ஜூன் 1ம் தேதியே தொடங்கியுள்ளது.

அருவிகளில் தண்ணீர்
ஞாயிற்றுக்கிழமை காலையில் நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் பகுதிகள் உள்பட பரவலாக சாரல் மழை விட்டு,விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விழுந்தது.

ஐந்தருவி, பழைய குற்றாலம்
தற்போது கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் விழத்தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு சீசன் உறுதி
இந்த ஆண்டு சரியாக ஜூன் முதல்தேதியே சீசன் தொடங்கியுள்ளதால் மூன்று மாதங்களுக்கு சீசன் நன்றாக இருக்கும் என்று சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சீசனில் தாமதமாக தொடங்கியது. பழைய குற்றால அருவியில் ஜூலை மாதம் 3வது வாரம் தான் தண்ணீர் விழுந்தது.
ஆனால் இந்தாண்டு சீசன் தொடங்கி மூன்றே நாளில் இந்த அருவியில் தண்ணீர் விழத்தொடங்கி விட்டது. சுற்றுலா பயணிகள் கூட்டம் ஓரளவு நன்றாக இருந்தாலும் போலீசார் வரிசையில் நின்று குளிக்க அனுமதித்தனர்.

வியாபாரிகள் தயார்
பயணிகளை வரவேற்க அருவிகள் தயார் நிலையில் உள்ளதால் குற்றாலத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் முழூ விச்சில் நடந்து வருகிறது. ஐந்தருவியில் பேரூராட்சி சார்பில் நிரந்தர கடைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்தாண்டு சீசன் நன்றாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பழங்களின் அணிவகுப்பு
குற்றாலம் கடைகளில் அரிய வகை பழங்களும் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. டோரியன், முட்டை பழம், ரம்ப்டான், மனோரஞ்சிதம், பன்னீர் கொய்யா, தேன் பழம் உள்ளிட்ட மலைப்பழங்கள் குவிந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications