அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்… வதந்தியால் பரபரப்பு
சென்னை: சென்னையில் அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் 10 மாநகராட்சிகளில் மலிவு விலை உணவகமான அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் 200 இடங்களில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர்சாதம் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுவதால் இந்த உணவகத்திற்கு தினந்தோறும் ஏழை, எளிய மக்கள் சாப்பிட படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். 10 ரூபாய்க்கு வயிறார உணவு கிடைப்பதாக பாராட்டும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று சாப்பிட்ட 17 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர்கள் கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
இதனையடுத்து செய்தியாளர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். ஆனால் அதுபோன்று யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சாலிகிராமம் உணவகத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது அது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் இது விஷமிகள் பரப்பிய வதந்தி என்று தெரியவந்தது.
அதிகாரிகள் எச்சரிக்கை
இந்த நிலையில் அம்மா உணவகம் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உணவகம் சுகாதாரமான முறையில் செயல்பட்டு வருவதாகவும், இந்த விசயத்தில் எந்த சமரசமும் கிடையாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications