மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..!
டெல்லி: பாஜகவின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும் வாழ்த்து தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் நடந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நியமித்து அறிவித்தார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்.
அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி கூறுகையில்,மோடிக்கு அத்வானியின் ஆசிகள் உண்டு. கட்சியினருடன் ஆலோசித்த பின்னர்தான் மோடிக்கு இந்தப் பொறுப்பு தரப்பட்டுள்ளது என்றார்.
கோவா கூட்டத்தில் அத்வானியைப் போலவே முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் மோடிக்கு அவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அத்வானி மீதுநான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரது வீட்டுக்கு வெளியே நேற்று நடந்த நிகழ்வுகளைக் கடுமையாக கண்டிக்கிறேன்.
கடந்த சில நாட்களாக என்னை அத்வானி ஆதரவாளர் என்றும், மோடி எதிர்ப்பாளர் என்றும் மீடியாக்கள் செய்தி போடுகின்றன. இதுதவறு. நான் யாருடைய ஆதரவாளரும் கிடையாது, எதிர்ப்பாளரும் கிடையாது.
உண்மையில் மோடிக்கு ஆதரவாக பேசிய முதல் தலைவரே நான்தான். மோடியை நான் வாழ்த்துகிறேன் என்று கூறினார் சின்ஹா.
பாஜகவின் கூட்டாளியான அகாலிதளம் கட்சி மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications