ட்விட்டரில் குவைத் மன்னருக்கு எதிராக கருத்து: ஆசிரியைக்கு 11 ஆண்டு சிறை
குவைத்: குவைத் மன்னருக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததற்காக அந்நாட்டைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
குவைத்தைச் சேர்ந்தவர் ஹுதா அல் அஜ்மி(37). ஆசிரியை. அவர் ட்விட்டரில், குவைத்தில் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மன்னரை அவமதித்ததுடன், நாட்டில் புரட்சியை தூண்டியதற்காக ஹுதாவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆன்லைனில் கருத்து தெரிவித்ததற்காக நீண்ட கால தண்டனை பெற்ற முதல் பெண் ஹுதா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது தண்டனையை எதிர்த்து முறையீடு செய்யலாம்.
அண்மையில் 2 பெண் ஆர்வலர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அது பின்னர் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.