மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு!
சென்னை: மலிவு விலை காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமையும் காய்கறிக் கடை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மலிவு விலை காய்கறி கடைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் தொடங்கப்பட்ட இந்த கடைகள் பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காய்கறிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்வதால் பசுமையாக இருக்கின்றன. இடைத்தரகர்களுக்கு இதில் இடம் இல்லாததால் சூப்பர் மார்க்கெட் மற்றும் வெளி மார்க்கெட்டை காட்டிலும் 50 சதவீதம் விலை குறைவாக கிடைக்கிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வசதிக்காக இந்த வசதியை டி.யு.சி.எஸ் நிறுவனம் செய்துள்ளது.

மேலும் டி.யு.சி.எஸ் சார்பில் 2 வாகனங்களில் நடமாடும் காய்கறி கடைகளும் விரைவில் செயல்படுத்தப்படுகிறது. கோயம்பேடு, மற்றும் மயிலாப்பூரில் இந்த வாகனங்கள் பொது மக்கள் கூடும் இடத்தில் நிறுத்தப்பட்டு காய்கறிகள் விற்கப்படும்.
சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு போட்டியாக கூட்டுறவு துறையின் மலிவு விலை காய்கறி கடைகள் செயல்படுகின்றன. மலிவு விலை காய்கறி கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications