இந்தோனேசியத் தீயிலிருந்து கிளம்பிய புகை சிங்கப்பூரை மூடியது... மக்கள் கடும் அவதி
சிங்கப்பூர்: சுற்றுச்சூழல் மாசு புதிய ரூபம் எடுத்துள்ளது. இந்தோனேசியாவிலிருந்து பரவிய புகையால் சிங்கப்பூர் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக இந்த இந்தோனேசிய புகை மாசால் சிங்கப்பூர் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிட்டத்தட்ட சிங்கப்பூரையே மூடியது போன்று இந்த தீப்புகை மாசு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் உள்ளிட்ட கஷ்டங்களையும் மக்கள் சந்திக்க நேரிட்டுள்ளது.
வரலாறு காணாத மாசு
சிங்கப்பூர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12 மணியளவில் மாசு அளவு 401 ஆக உயர்ந்து காணப்பட்டது. சிங்கப்பூரில் இந்த அளவுக்கு இதுவரை புகை மாசு பதிவானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவும் அவதி
இந்தோனேசியாவின் இந்த புகை மாசால் அருகில் உள்ள மலேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடி விட்டனர்.
பல வாரங்களுக்கு கஷ்டப்பட வேண்டும்
இந்த புகை மாசு குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சீங் லூங் கூறுகையில், இந்த புகை மாசு இப்போதைக்கு அகலுவது போலத் தெரியவில்லை. பல வாரங்களுக்கு இது நீடிக்கலாம் என்று அஞ்சுகிறோம்.
குப்பைகளைப் போட்டு எரிப்பதால்
இந்தோனேசியாவில் தொழில் நிறுவனங்கள் அமைக்கவும், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை கட்டவும் வசதியாக மரங்கள், வனப் பகுதிகளை தீவைத்து எரிக்கிறார்கள். இதநால்தான் இந்த புகை கிளம்பி எங்களது நாட்டை கடுமையாக பாதித்துள்ளது என்றார்.
சுமத்ராவிலிருந்து கிளம்பிய புகை
இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியிலிருந்துதான் இந்த புகை பரவிக் கொண்டிருக்கிறதாம்.
உடல் நல பாதிப்பு
இந்த புகை மாசால் சிங்கப்பூரில் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனறாம். மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. ஆஸ்த்மா பாதிப்புக்குள்ளானவர்கள்தான் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனராம்.
ஏசியைப் போட்டுக் கொண்டு உள்ளேயே
பெரும்பாலான மக்கள் கதவு, ஜன்னல்கள சுத்தமாக மூடி விட்டு ஏசியைப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.
முகமூடியுடன் நடமாட்டம்
வெளியில் வருவோர் முகமூடியை அதாவது மாஸ்க் அணிந்து கொண்டுதான் வருகிறார்களாம்.
தூதரக உறவிலும் பாதிப்பு
சுமத்ராவிலிருந்து கிளம்பும் புகை காரணமாக இந்தோனேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே தூதரக ரீதியிலும் சண்டை மூண்டுள்ளது.
எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு காரணமாகக் கூட போர்கள் மூளலாம் போலிருக்கிறதே....