உத்தரகாண்ட் வெள்ளம்: காவல் தெய்வம் தாரி தேவி இடம் மாறியதுதான் காரணமா?
டேராடூன்: உத்தரகண்ட் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு அம்மாநிலத்தின் காவல் தெய்வமான தாரி தேவியின் கோபம் தான் காரணம் என்று மக்கள் நம்புகின்றனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் திடீர் என்று பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5,000 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்துக்களின் புனித தலமான கேதர்நாத் பெரும் சேதத்தை சந்தித்தபோதிலும் அங்குள்ள கோவில் மட்டும் அப்படியே உள்ளது மக்களை வியக்க வைத்துள்ளது.
இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் காவல் தெய்வமான தாரி தேவியின் சிலை கோவிலில் இருந்து அகற்றப்பட்ட சில மணிநேரத்தில் தான் கன மழை கொட்டித் தீர்த்துள்ளது என்று கூறப்படுகிறது.

330 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் திட்டத்திற்காக தாரி தேவியின் சிலையை மூல ஸ்தனத்தில் இருந்து அகற்றியதால் தான் இந்த கேடு வந்துள்ளது என்று மக்கள் நம்புகின்றனர். தாரி தேவியின் கோபம் தான் உத்தரகண்டில் வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகள் ஏற்பட காரணம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
முன்னதாக 1882ம் ஆண்டில் உள்ளூர் மன்னர் ஒருவர் தாரி தேவியின் சிலையை அகற்ற முயன்றபோது கேதர்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆலக்நந்தா ஹைட்ரோ பவர் கம்பெனி லிமிடெட் தங்கள் நீர் மின் திட்டத்தை நிறைவேற்ற தாரி தேவி கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற அவசரம் காட்டியதாம். இதனால் அந்த நிறுவன அதிகாரிகள் அங்குள்ள அணையின் நீர்மட்டத்தை அதிகரித்துவிட்டு வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறி கடந்த 16ம் தேதி இரவு 7.30 மணிக்கு தாரி தேவியின் கோவிலுக்கு சென்று சிலையை அகற்றிவிட்டனர். உள்ளூர் பூசாரிகள் மற்றும் 2 பேர் சேர்ந்து சிலையை வேறு இடத்தில் வைத்துள்ளனர்.
வெள்ளம் ஏற்பட்டால் சிலை மூழ்கிவிடும் என்று கூறி அதில் இருந்து காக்கவே சிலையை அகற்றியதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சிலையை அகற்றிய சில மணிநேரத்தில் கேதர்நாத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications