100 அடியை நெருங்குகிறது பாபநாசம் அணையின் நீர்மட்டம்!
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மலையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தொடர் மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகரித்து அணைக்கு விநாடிக்கு 3083.22 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1004.75 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. பாபநாசம் அணை பகுதியில் 1 மி.மீ, சேர்வலார் அணை பகுதியில் 4 மி.மீ, மணிமுத்தாறு பகுதியில் 5.2மி.மீ, அம்பையில் 16.2மி.மீ, சேரன்மகாதேவியில் 6 மி.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது.

100 அடியை எட்டும் பாபநாசம் அணை
மேலும் காரையார், சேர்வலாறு அணை பகுதியில் லேசாக சாரல் மழை தொடருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று அல்லது நாளை 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிமுத்தாறு அணை
மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 115 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்திற்காக அணையிலிருந்து 275கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 21ம்தேதி கார் சாகுபடி பாசனத்திற்காக பாபநாசம் அணை திறக்கப்பட்டது.

ராமநதி அணையில் 65 அடி
மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ராமநதி அணையில் கடந்த சிலநாட்களுக்கு முன் 45 அடி நீர்மட்டம் இருந்து வந்தது. இதன் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். கடந்த சில நாட்கள் பெய்த மழையால் சுமார் 20 அடி உயர்ந்து 65 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு விடியவிடிய பெய்த மழையால் அணை நிரம்பியது. ராமநதி அணைக்கட்டு பாசனத்தில் 9 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடைகின்றன.
கடனா அணை நீர்மட்டம் விறுவிறு உயர்வு
ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடனா அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 85 அடியாகும். தொடர்ந்து பெய்துவரும் சாரல் மழையால் நீர்மட்டம் 72.5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 321 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இரு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications