சாப்பாடு கம்மியா இருக்கே...: வேலூர் சிறையில் சக கைதியை அடித்து நொறுக்கிய 6 ‘குண்டாஸ்’
வேலூர்: குறைந்த அளவில் மதிய உணவு வழங்கியதாகக் கூறி, உணவைப் பரிமாறிய கைதியை மற்ற 6 கைதிகள் அடித்து நொறுக்கிய சம்பவத்தால், வேலூர் சிறையில் பதட்டம் நிலவியது.
வேலூர் ஆண்கள் சிறையில், 1-வது பிளாக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அதே பிளாக்கில் உள்ள மற்றொரு கைதியான அசேன் ரசாக் என்பவர் மொத்தமாக உணவை வாங்கி வந்து பரிமாறுவது வழக்கமாம்.
தனக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டும், அசேன் கூடுதலாக உண்வு வழங்கி வருவதாக சக கைதிகள் அவர் மீது கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல அசேன் உணவை பிரித்து வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, சாப்பாட்டின் அளவு குறைவாக இருப்பதாக, கைதிகள் மோகன், பிரபு, சரவணன், கார்த்தி, திருமலை, சையத்இம்ரான் ஆகியோர் அசேனிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
அதில், அந்த 6 கைதிகளும் சேர்ந்து அசேன் ரசாக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். மோதலைத் தடுக்க முயற்சி செய்த அசேனின் தம்பி சாகுல்அமீது மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் அவர்கள். பின் போலீசாரின் தலையீட்டின் பேரில் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
ஆனாலும், சம்பவத்தில் படுகாயம் அடைந்த அசேன் ரசாக், சாகுல் அமீது ஆகியோர் உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஜெயில் அதிகாரி சூசை மாணிக்கம் பாகாயம் போலீசில் புகார் செய்துள்ளார்.
கைதிகள் பிரபு, சரவணன் உட்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications