உத்தரகண்டில் மேலும் 15 நாட்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணி: ஷிண்டே
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான 20 பேருக்கு இன்று அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். இதில் மதுரையைச் சேர்ந்த விமானி பிரவீனும்(27) அடக்கம். உயிர் இழந்தவர்களில் 5 பேர் விமானப் படை வீரர்கள், 9 பேர் தேசிய பேரழிவு மீட்பு படையினர், 6 பேர் இந்திய-திபெத் எல்லை போலீசார் ஆவர்.
அவர்கள் அனைவரின் உடல்களுக்கும் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுனா, ராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களில் வயாதனவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் முதலில் மீட்கப்படுவார்கள். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் இன்னும் 15 நாட்களுக்கு மீட்பு பணியில் ஈடுபடும். மீட்பு பணியை துரிதப்படுத்த கூடுதல் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என்றார்.
இந்நிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சார் தாம் புனிதயாத்திரை சர்க்யூட்டை சீரமைக்க ரூ.195 கோடி நிதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உத்தரகண்டில் 3,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும், அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை மாநில அரசின் இணையதளத்தில் அப்லோட் செய்தால் அது அவர்களை கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications