என் வெற்றிக்காக அப்பாவும், அண்ணன் ஸ்டாலினும் கடினமாக உழைத்தார்கள்: கனிமொழி
சென்னை: ராஜ்யசபா தேர்தல் வெற்றி என்னைவிட என் அண்ணன் ஸ்டாலினுக்கு தான் உரித்தானது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெயற்ற திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிச் சான்றிதழுடன் தனது தந்தையும், கட்சி தலைவருமான கருணாநிதி மற்றும் அண்ணன் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். கனிமொழி தற்போது இரண்டாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு,
கேள்வி: உங்கள் வெற்றியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: ராஜ்யசபா தேர்தலில் நான் வெற்றி பெற அப்பாவும், அண்ணன் ஸ்டாலினும் கடுமையாக உழைத்தார்கள். என் வெற்றிக்கு அண்ணன் ஸ்டாலினின் பங்களிப்பு அதிகம். உண்மையை கூற வேண்டும் என்றால் இந்த வெற்றி என்னைவிட ஸ்டாலினுக்கு தான் உரித்தானது.
கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்று கூறப்பட்டது. அதில் போட்டியிட்டால் தோல்வி அடைவோம் என்ற பயத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டீர்களா?
பதில்: கட்சி மற்றும் கட்சி தலைமை கட்டளையிட்டதால் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டேன். மனு தாக்கல் செய்தபோதும் கூட எங்கள் வெற்றி உறுதியாக இல்லாமல் இருந்தது. ஏனென்னறால் எங்களிடம் வெறும் 23 எம்.எல்.ஏ.க்கள் தான் இருந்தனர். கட்சியின் முடிவை ஏற்று வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் போட்டியிட்டேன்.
கேள்வி: இவ்வளவு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்தீர்களா? காங்கிரஸ் ஆதரவால் தானே உங்களால் வெற்றி பெற முடிந்தது?
பதில்: எனக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து கட்சிகளிடமும் பேசி வருவதாக கலைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். என்னை ஆதரித்த அனைத்து கட்சிகளுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். பிற கட்சிகளுடன் ராஜ்யசபா தேர்தல் தவிர பிற விஷயங்கள் பற்றி எதுவும் பேசவில்லை.
கேள்வி: 2ஜி ஊழல் வழக்கு இருப்பதால் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். தீர்ப்பு வரும் வரை காத்திருந்து போட்டியிட்டிருக்கலாமே?
பதில்: 2ஜி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதில் என் மீதான குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கில் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபித்து வெளியில் வருவேன். வழக்கு முடிந்த பிறகு தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள போதே எத்தனையோ தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.
கேள்வி: ஈழ தமிழர்கள் பிரச்சனையால் தான் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது. தற்போது காங்கிரஸ் ஆதரவை பெற்றதால் ஈழத் தமிழர் பிரச்சனையை திமுக கைவிட்டுவிட்டது என்று கூறலாமா?
பதில்: எந்த கூட்டணியில் இருந்தபோதும் திமுக ஈழத் தமிழர் பிரச்சனையை விட்டுக்கொடுத்ததில்லை. மேலும் ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஈழத் தமிழர் பிரச்சனையை திமுக விட்டுக் கொடுத்ததே இல்லை. எங்கள் கட்சி தலைவர்கள் யாரிடமும் ஈழத் தமிழர் பிரச்சனையை விட்டுவிடுவதாக தெரிவித்தது இல்லை. இது திமுகவை எதிர்க்கும் சிலரின் கற்பனையான குற்றச்சாட்டு.












Click it and Unblock the Notifications