எஸ்.எம்.எஸ்.மூலம் ரயில் டிக்கெட் பெறுவது எப்படி?
டெல்லி: அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து துறைகளுமே தங்களை மாற்றிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கம்ப்யூட்டர் வந்தால் ஆட் குறைப்புக்கு வழிவகுக்கும் என்று கொடி பிடித்த அனைவருமே இப்போது கம்ப்யூட்டர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை.
ரயில்வே துறையும் இதேபோல்தான்...இணைய பயன்பாடு நடைமுறைக்கு வந்த காலம் முதல் ரயில்வே துறையும் தம்மை முழுமையாக மாற்றிக் கொண்டது. இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள இ டிக்கெட்டை அறிமுகம் செய்தது. வீட்டில் இருந்து கொண்டே டிக்கெட் புக் செய்துவிட்டு ஒரு பிரிண்ட் அவுட்டை மட்டும் வைத்துக் கொண்டால் போதும் என்ற நிலையை உருவாக்கியது ரயில்வே.
இப்போது எம்.டிக்கெட் என்ற புதிய நடைமுறையை உருவாக்கி இருக்கிறது. பிரிண்ட் அவுட் எல்லாம் தேவை இல்லை.. இப்போதுதான் அனைத்து செல்போன்களிலுமே இணைய வசதி வந்துவிட்டது அல்லவா? அதனால் எஸ்.எம்.எஸ். மூலமே இனி ரயில் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்

யாரால் இந்த சேவையை பயன்படுத்த முடியும்?
உங்கள் செல்போனில் ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி.யில் முதலில் நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். ப்ரீ பெய்டு, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் அனைவருமே பதிவு செய்து கொள்ளலாம். ஜாவா மென்பொருள் இயங்கக் கூடிய செல்போன்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஜி.ஆர்.பி.எஸ்.சேவை உள்ள அனைத்து போன்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் பெறலாம்

எஸ்.எம்.எஸ். அனுப்ப எண்கள்
எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் பெற இரண்டு சிறப்பு எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 139 மற்றும் 5676714 ஆகிய எண்கள் இதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன.

எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் பெற என்ன செய்ய வேண்டும்?
ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் செல்போனில் இயங்குவதற்கான மென்பொருளை அந்த தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். உங்கள் செல்போன் எண்ணை அந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்..தற்போது வங்கிகள் செல்போன் மூலமே பணப் பரிமாற்றத்துக்கு உதவுகிறது. மேலும் பணபரிமாற்றத்தின் போது ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் வழங்கப்படுகிறது.

பயண விவரங்கள்
நீங்கள் பயணம் மேற்கொள்ளும் விவரங்கள் அதாவது ரயில் எண், சேரும் இடம், பயண தேதி, எந்த வகுப்பு, பயணம் செய்வோரின் பெயர், பாலின ஆகியவற்றை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்க வேண்டும். நீங்கள் தகவல் அனுப்பிய உடன் அந்த தேதியில் டிக்கெட் இருக்கிறதா என்ற தகவல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கட்டணம் செலுத்தும் முறை
மேலும் கட்டணத்தைச் செலுத்துவதற்காக ஒரு ஐடி ஒன்றும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மற்றொரு எஸ்.எம்.எஸ்.மூலம் PAY என டைப் செய்து உங்களுக்கான ஐடி மற்றும் செல்போன் பண பரிமாற்றத்துக்கான பாஸ்வேர்ட் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்

எஸ்.எம்.எஸில் டிக்கெட்
டிக்கெட்டுக்கான கட்டணம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். புக் செய்யப்பட்ட டிக்கெட் பற்றிய தகவல்கள் உங்களுக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் வந்துவிடும். எந்த ஒரு பிரிண்ட் அவுட் எல்லாம் தேவை இல்லை. பரிசோதகர் வந்து பயணச் சீட்டை கேட்டால் எஸ்.எம்.எஸை காண்பிக்கலாம்.

சேவை கட்டணம் எவ்வளவு?
இப்படி ரயில் டிக்கெட் புக் செய்ய ஒரு எஸ்.எம்.எஸ்க்கு ரூ3 கட்டணம். ரூ5ஆயிரத்துக்கும் குறைவான டிக்கெட் கட்டணமாக இருந்தால் ரூ5 சேவை கட்டணம். ரூ5 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால் ரூ10 சேவை கட்டணம்.

ஜூலை 1 முதல் நடைமுறை
எஸ்.எம்.எஸ்.மூலம் ரயில் டிக்கெட் பெறுவது ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.












Click it and Unblock the Notifications