சென்னையில், பால்கனி இடிந்து விழுந்ததில் 4 மாதக் குழந்தையின் தாய் பலி: 2 சிறுவர்கள் கவலைக்கிடம்
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில், பால்கனி இடிந்து தலையில் விழுந்ததில் 4 மாத குழந்தைக்குத் தாயான இளம்பெண் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
வண்டலூரை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் ஜெகதீசனின் மனைவி புவனேஷ்வரி. இவர் பிரசவத்துக்காக சென்னை தேனாம்பேட்டை நல்லான் தெருவில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். தற்போது குழந்தை பிறந்து 4 மாதங்களே ஆகிறது.
நேற்று மதியம் முதல் மாடி பால்கனியில் நின்று, கீழே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் புவனேஷ்வரி. அப்போது எதிர்பாரா விதமாக இரண்டாவது மாடி பால்கனி இடிந்து முதல் மாடி பால்கனி மீது விழுந்தது. அதில் முதல் மாடியில் நின்று கொண்டிருந்த புவனேஷ்வரிக்கு தலையில் பலத்த காயம் உண்டானது.
மேலும், பால்கனிஉ இடிந்து விழுந்த விபத்தில் கீழே விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மகன் ருதேஷ் (9) மற்றும் அப்பாத்துரையின் மகன் ஆதவன் (8) ஆகியோரும் காயம் அடைந்தனர். புவனேஷ்வரி உட்பட காயமடைந்த மூவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அக்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், புவனேஷ்வரி ஏற்கனவே இறாந்து விட்டதாகத் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த இரு சிறுவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications