என் மகனை யாரோ கொன்று தண்டவாளம் அருகே போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள்: இளவரசனின் தந்தை கண்ணீர்

தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகே தனது மகன் இளவரசன் பிணமாக கிடப்பது குறித்து அறிந்து இளங்கோவன் அங்கு ஓடி வந்தார். பிணமாக கிடப்பது தனது மகன் தான் என்பதை பார்த்ததும் அவர் கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மகன் திவ்யாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டான். அன்று முதல் அவர்கள் மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் பெங்களூரில் குடித்தனம் நடத்தினர். பின்னர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்து நான் அவர்களை இங்கு அழைத்து வந்தேன். அவர்கள் இங்கு வந்த பிறகு திவ்யாவை அவரது தாய் மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி சந்தித்து பேசினர். திவ்யாவின் குடும்பத்தினரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தால் உடனே அவர் மாடிக்கு சென்று பேசுவார்.
அவரது குடும்பத்தார் அவரின் மனதை மாற்ற முயன்று மாற்றியும்விட்டனர். இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான திவ்யா தனது தாயுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் கவலை அடைந்தோம். ஆனால் என் மகனோ கவலைப்படாதீர்கள் பிரச்சனை சுமூகமாக தீரும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவன் ஏடிஎம்மில் ரூ.9,000 பணம் எடுத்துள்ளான். எனது செல்போனில் மெசேஜ் வந்தது. அவனிடம் கேட்டதற்கு நான் தான் அப்பா பணம் எடுத்தேன் என்று கூறினான். இந்நிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு ரயில் நிலையம் அருகே ஒரு சடலம் கிடக்கிறது அது இளவரசனுடையதாக இருக்கலாம், நீங்கள் வந்து அடையாளம் காட்டுங்கள் என்று ஒரு போலீஸ்காரர் என்னிடம் வந்து கூறினார். இதையடுத்து நான் இந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது இங்கு பிணமாக கிடந்தது என் மகன் தான் என்பது தெரிய வந்தது.
அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறுவதை என்னால் நம்பவே முடியவில்லை. யாரோ அவனை கொன்று ரயில் தண்டவாளம் அருகே போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள் என்றார்.
அவர் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது புகார் கூறினார்.












Click it and Unblock the Notifications