பெண்கள் மீது அமில வீச்சு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
டெல்லி: சில்லறை விலையில் அமில விற்பனையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக கடுமையான சட்டம் கொண்டுவருவதில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் காரைக்கால் வினோதினி மீது நிகழ்ந்த அமில வீச்சு அவரது உயிரையே பறித்தது. அடுத்த சில வாரங்களில் சென்னை வித்யாவும் அமில வீச்சிற்கு பலியானார்.
தமிழகம் மட்டுமல்லாது நாடுமுழுவதும் கடந்த சில மாதங்களாக அமில வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமில விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அமில விற்பனையை ஒழுங்குபடுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது, மாநில அரசுகளோடு ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை
இதனையடுத்து இவ்விவகாரத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை என்றும், மெத்தனமாக செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications