தெலுங்கானா குறித்து காங்கிரஸ் நாளை முடிவு- ஆந்திராவில் பதற்றம்!
ஹைதராபாத்: பல ஆண்டுகளாக நீடித்து வரும் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாளை முக்கிய முடிவு எடுக்க இருப்பதால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆந்திராவில் 10 மாவட்டங்களைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதற்கான போராட்டங்கள் மடிந்த உயிர்கள் பல..உச்சகட்டமாக 2009ஆம் ஆண்டு போராட்டம் நடந்த போது தனித் தெலுங்கானா மாநிலம் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி மொழி அளித்தது.
ஆனாலும் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படவில்லை இதனால் போராட்டங்கள் தொடர் கதையாகின. ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாகும் வகையில் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினரும் கொடிபிடிக்கத் தொடங்கினர். விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானா விவகாரத்துக்கு முடிவு கட்ட காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இதற்காக நாளை காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, துணை முதல்வர் தாமோதர் ராஜநரசிம்மா, மாநில காங்கிரஸ் தலைவர் போட்ஸா சத்திய நாராயணனா ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் தெலுங்கானா தொடர்பான தங்களது நிலைபாட்டை தெரிவிக்க இருக்கின்றனர்.
இதனிடையே நாளை ஐக்கிய ஆந்திர மாணவர் கமிட்டி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில் டெல்லிக்கும் ஒரு குழு சென்று காங்கிரஸ் பொதுச்செயல்ர் திக்விஜய்சிங்கை சந்திக்க இருக்கிறது. மேலும் ராஜ்யசபா எம்.பி. ராமச்சந்திர ராவ் வீட்டில் இன்று காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.
இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.