இந்திய எம்.பிக்கள் குழு மீண்டும் இலங்கை பயணம்.. ராஜபக்சேவுக்கு கொண்டாட்டம்!
டெல்லி: 10 பேர் கொண்ட இந்திய எம்.பிக்கள் குழு விரைவில் இலங்கைக்கு செல்ல இருக்கிறது.
இந்திய எம்.பி.க்கள் குழு இரண்டு வாரங்களில் இலங்கை வரும் என்று அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவினர் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்கப்பட உள்ள வீடமைப்புத் திட்டம் குறித்து ஆராய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்த குழு இலங்கை வருவதாகவும் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய தொழிற்சாலை மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இந்திய எம்.பிக்கள் குழுவினர் இலங்கைக்குச் சென்றனர். அந்த குழுவில் காங்கிரஸ், கட்சியைச் சேர்ந்த சந்தீப் தீட்சித், பாஜவைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் தாக்குர், பகுஜன் சமாஜ் கட்சியின் தனஞ்ஜய் சிங், திரிணமுல் காங்கிரஸ் சார்பில் செஷகதா ராய் ஆகிய எம்.பிக்கள், இடம் பெற்றனர். இப்போது மீண்டும் 10 பேர் கொண்ட குழு இலங்கைக்கு பயணமாக உள்ளது. அவர்கள் செல்லும் தேதி, இடம் பெறும் எம்.பிக்கள் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.