ஆர்ப்பரிக்கும் அருவிகள்… குற்றாலத்தில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்
குற்றாலம்: டேய் மாப்ள சாரல் சூப்பரா இருக்கு, அருவியில் தண்ணீர் நல்லா விழுது என்று போனடித்தாலே ஸ்கார்பியோ, சுமோ, தவேரா வண்டிகளில் கூட்டமாக கிளம்பிவிடுவார் குற்றாலத்திற்கு. அதுவும் சனி ஞாயிறுகளில் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். விசிலும், உற்சாகமுமாய் அருவியில் குளித்து ஆட்டம் போட குவிந்து விடுவார்கள்.
இதமான சாரல், மிதமான வெயில், குளுமையான காற்று இதுதான் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதற்கான அறிகுறி. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம்.
மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டாலே குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து விடும். இந்த ஆண்டு மே.31ம் தேதி சரியாக சீசன் தொடங்கியது. கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்கு குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் நீராடி மகிழ்கின்றனர்.
மெயின் அருவியில் உற்சாகம்
குற்றாலத்தில் பேருந்து நிலையம் அருகில் உள்ளது பிரதான அருவி. இந்த ஆண்டு மட்டும் 9 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 தினங்களாக மழை குறைந்து மிதமான வெயில் அடிப்பதால் குவியும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
ஐந்தருவியில் ஆட்டம்
ஐந்தருவியில் 5 கிளைகளிலும் ஆர்பரிக்கிறது தண்ணீர் இதனால் அனைவரும் நெரிசல் இன்றி ஆட்டம் போட்டு குளிக்கின்றனர். மணிக்கணக்கில் உடம்பை ஊறவைத்துவிட்டுதான் வெளியேறுகின்றனர்.
பழைய குற்றாலத்தில்…
வார விடுமுறை நாளான சனி, ஞாயிறுக்கிழமைகளில் உற்சாகமாக குவிந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் பழைய குற்றால அருவியில் குவிந்தனர். அங்கே ஆண்களும், பெண்களுமாய் அருவியில் குளிக்க சிறுவர்கள் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து மகிழ்ந்தனர்.
புலியருவியில் சிறுவர்கள்
சிறுவர்கள் குளித்து மகிழ ஏற்ற அருவி புலியருவி. இதில் வயதானவர்களும், சிறுவர்களும் உற்சாக குளியல் போட்டனர்.
கேரளாவின் பாலருவி
குற்றாலத்திற்கு வருபவர்கள் இங்குள்ள அருவிகளில் குளித்து முடித்துவிட்டு நேராக கேரளாவிற்கு படையெடுக்கின்றனர், அங்கு ஆரியங்காவிற்கு அருகில் உள்ள பாலருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்ட அதிலும் சூப்பராய் ஒரு குளியல் போட்டுவிட்டு திரும்புகின்றனர்.
சுத்தமான அருவி
அருவிகளில் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்க தடை இருந்தாலும் அதை தமிழ்நாட்டில் குறிப்பாக குற்றாலத்தில் யாரும் கடைபிடிப்பதில்லை. அதேசமயம் கேரளாவின் பாலருவியில் அதை கண்டிப்பாக கடை பிடிக்கின்றனர். யாரும், சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பதில்லை. பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. வனப்பகுதிகளில் சுத்தம் கடைபிடிக்கப்படுகிறது.
பார்டர் கடை புரோட்டா
அருவியில் குளித்த களைப்போடு நேராக ஹோட்டல்களுக்கு படையெடுக்கும் மக்கள், சைவ, அசைவ உணவுகளை ஒரு பிடி பிடிக்கின்றனர். பிரானூர் பார்டரில் உள்ள புரோட்டா, பிரியாணி கடைகளில் கூட்டம் அள்ளுகிறது. க்யூ வரிசையில் நின்றுதான் சாப்பிட முடிகிறது. குற்றாலம் வந்ததன் பயன் அப்போதுதான் நிறைவடைகிறது.
நீங்களும் ஒருமுறை
குற்றாலம் மெயின் அருவியில் குளித்தவர்கள் நேராக போவது குற்றாலநாதர் கோவிலுக்குத்தான். அங்கே தரிசனம் முடித்துவிட்டு அப்படியே சுற்றிப்பார்க்க கிளம்பிவிடுகின்றனர். பெரும்பாலோனோர் கடை வீதிகளில் பர்ச்சேஸ் செய்கின்றனர். அரியவகைப் பழங்களும், மூலிகைகளையும் வாங்கிச் செல்கின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த முறை சீசன் களை கட்டியுள்ளதால் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். நீங்களும் ஒருமுறை குற்றாலம் போய்விட்டு வாங்களேன்.