ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இறுதி தீர்ப்பு கிடைக்கும் வரை ஆலையை இயக்கிக்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், புகாருக்கான அறிவியல் ஆதாரங்களை வழங்க தவறியதால், ஆலை தொடர்ந்து இயங்கலாம் என்று அனுமதி வழங்கியது. மேலும் ஆலையை கண்காணித்து நச்சு வாயு அளவு பற்றி அறிக்கை அளித்திட நிபுணர் குழு ஒன்றையும் அளித்தது.
இக்குழு ஆய்வினை முடித்து கடந்த 10ம் தேதி அறிக்கையை அளித்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நிபுணர் குழு அளித்த அறிக்கை மீதான வாதம் நேற்று, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. அப்போது, ஆலைக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், ஆலை மூடிப்பட்டு, பின்னர் திறக்கப்பட்ட போது நடைபெற்றிருக்க வேண்டிய பரிசோதனை ஓட்டம் நடைபெறவில்லை என்றார். மேலும், ஆலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நிபுணர் குழு அறிக்கையில் எதுவும் இடம் பெறவில்லை என்று ராஜூ ராமச்சந்திரன் கூறினார்.
இதைத்தொடர்ந்து வாதாடிய ஸ்டெர்லைட் ஆலை வழக்கறிஞர் அரிமா சுந்தரம், நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் புதிதான ஒன்று அல்ல என்றார். எனினும், குறிப்பிட்ட கால அளவிற்குள் ஆலை நிர்வாகம் பரிந்துரைகளை நிறைவேற்றும் என்று அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என நிபுணர் குழு அளிக்கை அளித்திருப்பதால், இறுதி உத்தரவு வரும் வரை ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது தெரிவித்தார்.