2வது கல்யாணம் செய்வதற்காக மனைவியைக் கொன்று எரித்த கணவர்
கோபிச்செட்டிப்பாளையம்: 2வது திருமணம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வரதட்சணைப் பணத்தை வைத்து கடனை அடைக்கலாம் என்று பிளான் போட்டு, முதல் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கோபி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசூர் தேவாங்கபுரத்தில் குப்பை கொட்டும் இடத்தில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தனிப்படையும் அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் துப்பு துலங்கவில்லை. இந்தநிலையில் அந்தப் பெண் அணிந்திருந்த மூக்குத்தி போலீஸாருக்குத் திருப்புமுனையைக் கொடுத்தது. அதை வைத்து அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் கொங்கலையா என்பவர் சிக்கினார். அவரது மனைவிதான் எரிந்தநிலையில் பிணமாக கிடந்தவர் ஆவார். அவரது பெயர் மீனாட்சி. வயது 29 ஆகிறது.
கொங்கலையாவா போலீஸார் விசாரித்தபோது தான்தான் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கொடுத்த வாக்குமூலத்தில்,
நானும், மீனாட்சியும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நான் குண்டல்பேட்டையில் கடன் பெற்று, சொந்தமாக வேன் ஒன்று வாங்கி ஓட்டி வந்தேன். அந்த வேனுக்கு சரியாக வாடகை கிடைக்காததால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.
பிறகு, வேனை விற்று விட்டு ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரசூருக்கு குடிபெயர்ந்தோம். அங்கிருந்து அவினாசியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் 2 பேரும் வேலைக்கு சென்று வந்தோம். 3 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என்னை கிண்டல் செய்தனர். எனவே, எனக்கு மிகுந்த அவமானம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக எனக்கும், மீனாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. மேலும், வேன் வாங்கிய வகையில் ஏற்பட்ட கடனை திரும்ப செலுத்த முடியாததால் 2 பேரும் வாழ்க்கையில் விரக்தி அடைந்தோம். அதனால், மீனாட்சியைக் கொலை செய்து விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது எனவும், அதில், கிடைக்கும் வரதட்சணை பணத்தை கொண்டு கடனை அடைத்து விடுவது என்றும் முடிவு செய்தேன்.
அதன்படி, கடந்த 7-ந் தேதி இரவு மீனாவிடம் நைசாக பேசி அரசூர் பவானி ஆற்றுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு, 2 பேரும் ஆற்றுக்குள் இறங்கினோம். எனது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மீனா, திடீரென்று தண்ணீரில் இருந்து கரைக்கு ஓடி விட்டார். அப்போது, அவரை நான் கையால் தாக்கினேன். இதில், அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார்.
பிறகு, வீட்டுக்கு சென்று நைலான் கயிறு மற்றும் மண்எண்ணை ஆகியவற்றை எடுத்து வந்தேன். அங்கு, நைலான் கயிற்றைக் கொண்டு மீனாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அவருடைய உடலை சிறிது தூரம் தூக்கிச் சென்று தேவாங்கபுரம் குப்பைமேட்டில் போட்டு, மண்எண்ணை ஊற்றி தீ வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டேன். பின்னர் வழக்கம்போல் நான் வேலைக்கு சென்று வந்தேன் என்றார்.
கொங்கலையாவை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications