வேலூர் நகைக்கடையில் துளைபோட்டு 4 கிலோ தங்கம் கொள்ளை
வேலூர்: வேலூர் நகைக்கடையில் 4 கிலோ தங்கம், 3லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மெயின் பஜாரில் நாகா ஜுவல்லரி நகைக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர்.
இன்று கடையின் மேல்மாடியில் பின்புறம் திடீர் துளையை கண்ட அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார், டி.எஸ்.பி.க்கள் தட்சிணாமூர்த்தி, சீத்தாராமன், இன்ஸ்பெக்டர் வீரப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கடையை திறந்து உள்ளே சென்றனர். கடையில் மேல்மாடி பகுதியில் இருந்த சுமார் 4 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போனதாக தெரிவித்தனர்.
மேலும் கொள்ளைபோன நகை, வெள்ளி பொருட்கள் எவ்வளவு என்பது குறித்து கணக்கு எடுத்து வருகின்றனர். நள்ளிரவில் கடையின் மாடியில் உள்ள பின்புற சுவற்றில் துளைபோட்டு கொள்ளை கும்பல் புகுந்துள்ளனர். அங்கிருந்த தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்களை அள்ளி சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடையை நன்றாக நோட்டமிட்டு திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இதில் பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்கேகம் எழுந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும். என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
மெயின் பஜார் பகுதி முழுவதும் நகைக் கடைகள் உள்ளன. இங்கு இரவு முழுவதும் விடிய விடிய காவலர்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நாகா ஜுவல்லரியில் உள்ள காமிராக்களில் கொள்ளையர்கள் பதிவாகி இருக்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதன் அருகே உள்ள காந்திரோடு பகுதியில் ஏராளமான லாட்ஜ்கள் உள்ளன. இதே தெருவில் கடந்த ஆண்டு வடமாநில கும்பல் நகை அடகு கடையில் துளைபோட்டு 5 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அந்த நகைகள் மாவோயிஸ்டுகளுக்கு சப்ளை செய்யபட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் வேலூர் லாட்ஜிகளில் தங்கியிருந்தவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
நகரின் மையபகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது. போலீசார் கடையில் விசாரணை செய்த போது ஏராளமான பொதுமக்கள் மெயின் பஜாரில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த 2003ம் ஆண்டு இதே நகை கடையில் கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கியால் நகை கடை உரிமையாளர், ஊழியரை சுட்டு கொலை செய்தனர். பின்னர் அங்கு இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையடித்து விட்டு தப்பி செல்லும் போது வேலூர் பேலஸ்கபே அருகில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை கொள்ளையர்கள் தப்பி செல்வதற்காக பறித்தனர். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை கொடுக்க மறுத்ததால் அவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். கொலை, கொள்ளை நடந்து 10 வருடமாகியும் இதில் குற்றவாளிகள் கைது செய்யபடவில்லை
மூன்றாவது முறையாக
இதற்கு பின்னரும் 2007ம் ஆண்டு இதே கடையில் கொள்ளை நடந்தது. தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது நகைக்கடை உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications