கொலையான ஆடிட்டர் ரமேஷ் செய்த தவறு என்ன... இல.கணேசன் வேதனை

வேலூரில் நடந்த வெள்ளையப்பன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வேலூரில் கடந்த 14 நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு உள்ளார். இவர்கள் செய்த தவறு என்ன? சொத்து பிரசினையா? அல்லது நிலத்தை அபகரித்தார்களா? தேசத்துக்காக உழைத்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து இந்து மத தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சி எழுச்சியை தடுக்கவே இந்த கொலைகள் நடக்கிறது. நாளை தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்ததுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்.
ஏற்கனவே 100க்கும் மேற்பட்டவர்களை இழந்துள்ளோம். இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி ஜனநாயக முறையில் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.
இதுவரை எந்த வழக்கிலும் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அத்வானி மதுரைக்கு வந்த போது பாலத்தில் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து இந்து தலைவர்கள் மீது 10 தாக்குதல் சம்பவம் நடந்துள்ளன. 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றவாளிகள் இதுவரை கண்டு பிடிக்கவில்லை.
தேசபக்தி உள்ள தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சேலத்தில் கொலை செய்யப்பட்ட ரமேஷ் நேர்மையானவர். அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது என தெரிந்தும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், நடந்த கொலைகளில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யக் கோரியும் விரைவில் முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications