தெலுங்கானா.. நாளை காங். காரிய கமிட்டி கூடுகிறது! இறுதி முடிவு அறிவிக்கப்படுகிறது!!
டெல்லி/ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
ஆந்திராவை பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது நீண்டகால கோராட்டம் இதற்காக அரை நூற்றாண்டுகாலமாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் போயுள்ளனர்.
விரைவில் லோக்சபா மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பாக இறுதி முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆலோசனைகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. நேற்றும் டெல்லியில் இந்த பிரச்சனை குறித்து ஆந்திர மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங், தெலுங்கானா விவகாரத்தில் ஆலோசனைகள் முடிவடைந்துவிட்டன. முடிவுதான் அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தெலுங்கானா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் தெலுங்கானா பற்றி உறுதியான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்குவதற்கு முன்பாக தெலுங்கானா நிலைப்பாட்டை அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.